பிரித்தானிய நாடாளுமன்ற அனுமதியின்றி ஐரோப்பிய ஒன்றிய விதிகளை அமுல்படுத்தத் திட்டம்?
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ஒற்றைச் சந்தை விதிகளை, முறையான நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமலேயே பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக புதிய சட்டம் ஒன்றை பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம் திட்டமிட்டுள்ளது
உணவுத் தரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகளுடன் பிரித்தானியாவை ஒருங்கிணைப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தொழிலாளர் கட்சி (Labour) வட்டாரங்கள், ‘இந்த நடவடிக்கையானது வணிகங்களுக்கான செலவைக் குறைக்கும். குறிப்பாக, பிரெக்ஸிட் (Brexit) நடைமுறைகளால் உருவான கூடுதல் வரிச்சுமை மற்றும் ஆவணப் பணிகளைக் குறைப்பதன் மூலம்இ மக்களின் வாராந்தர மளிகைப் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்துள்ளன.
இதனிடையே , தற்போது பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உணவுப் பாதுகாப்பு மற்றும் விலங்கு, தாவர ஆரோக்கியம் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு, ‘டைனமிக் அலைன்மென்ட்’ (Dynamic Alignment)எனப்படும் புதிய அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படும். இதன் மூலம, பிரஸ்ஸல்ஸில் (ஐரோப்பிய ஒன்றியம்) ஒரு புதிய விதி அங்கீகரிக்கப்படும் போதெல்லாம், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் விரிவான ஆய்வோ அல்லது வாக்கெடுப்போ இன்றி அதனை நேரடியாக அமுல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தத் திட்டத்திற்கு கன்சர்வேடிவ் (Conservatives) மற்றும் ரிஃபார்ம் யூகே (Reform UK) ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்றும், பிரெக்ஸிட் முடிவுகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளைப் பின்பற்றுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என அவர்கள் வாதிடுகின்றனர்.
