பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்
தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு ஒரு நாள் கழித்து, பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்று குறிவைத்ததாகவும், அப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் புதன்கிழமை (18) அதிகாலையில் தெரிவித்தன.
செவ்வாயன்று, தூதரகத்தை ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் குறிவைத்ததாகவும், தூதரக வளாகத்திற்கு அருகில் வெடிச்சத்தம் கேட்டதால் அபாய ஒலி எழுப்பப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
எனினும் இதனால் உண்டான உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அமெரிக்கத் தூதரக வளாகம் ஒன்றையும் குறைந்தது மூன்று வெடிகுண்டு ட்ரோன்கள் குறிவைத்துத் தாக்கியதில், சி-ராம் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக அந்த வட்டாரங்கள் செவ்வாயன்று தெரிவித்தன.
பெப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்குப் பதிலடியாக, தெஹ்ரான் ஆதரவு பெற்ற போராளிக் குழுக்கள் ஈராக்கில் உள்ள அமெரிக்க நலன்களைத் தாக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
