Main Menu

தீவிர சைவ உணவு பழக்கமுடைய இலங்கை வைத்தியர் மரணம்: கட்டார் எயார்வேஸ் மீது வழக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவந்த 85 வயதுடைய ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான அசோக ஜயவீர, கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) விமானத்தில் தாம் கோரிய சைவ உணவு (Vegetarian Meal) மறுக்கப்பட்டதன் விளைவாக, வேறு உணவு தொண்டையில் சிக்கி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் இழப்பீட்டு வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

உயிரிழந்த மருத்துவரின் மகனான சூர்யா ஜயவீர கடந்த 3 ஆம் திகதி மத்திய கலிபோர்னிய கூட்டாட்சி நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையை பூர்வீகமான கொண்ட அசோக ஜயவீர (Asoka Jayaweera) லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது.

கடுமையான சைவ உணவுப் பழக்கம் கொண்டிருந்த அசோக ஜயவீரவுக்கு, விமானப் பணியாளர்கள் அவர் கோரிய உணவை வழங்க மறுத்துள்ளனர்.

“சைவ உணவுகள் தீர்ந்துவிட்டன” என்று கூறி, அவருக்கு இறைச்சி கலந்த பொதுவான உணவை கொடுத்து, இறைச்சியைத் தவிர்த்துவிட்டுச் சாப்பிடுமாறு பணித்துள்ளனர்.

இறைச்சியைத் தவிர்த்துவிட்டுச் சாப்பிடுவதற்கு அசோக ஜயவீர முயற்சிக்கும்போது, உணவின் ஒரு பகுதி அவரது தொண்டையில் சிக்கி, அவர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத் திணறல் ஏற்பட்ட நேரத்தில் விமானம் அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தின் மேலே பறந்து கொண்டிருந்தபோதிலும், விமானி அவசரமாகத் தரையிறங்க மறுத்துவிட்டார்.

விமானம் ஆர்க்டிக் கடல் பகுதியைக் கடந்து செல்வதால் திசை திருப்ப முடியாது என்று விமானக் குழுவினர் கூறியதாக மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்

அவர் சுமார் மூன்றரை மணி நேரம் மயக்கமடைந்திருந்த நிலையில், விமானம் ஸ்காட்லாந்தின் எடின்பரோவில் தரையிறங்கியது.

பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அசோக ஜயவீர, உணவை உள்ளிழுத்ததால் ஏற்பட்ட நுரையீரல் அழற்சி காரணமாக உயிரிழந்ததாக மனுதார்கள் கூறுகின்றனர்.

மருத்துவரின் மகன் சூர்யா ஜயவீர, விமானத்தை திசை திருப்பி தந்தைக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளித்திருக்க முடியும் என்று குற்றம் சாட்டியுள்ளதுடன், அலட்சியம் காரணமாக ஏற்பட்ட மரணத்திற்காக கட்டார் ஏர்வேஸ் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

பகிரவும்...
0Shares