Main Menu

தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்க வேண்டுமெனக் கோரிக்கை

சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியா செல்லவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
75 வருட காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த கொள்கை மற்றும் தீர்வு காணப்படாத இனப்பிரச்சினை என்பன பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியிலும் வங்குரோத்து நிலைக்கு இலங்கையைக் கொண்டுவந்துள்ளன.
எனவே, நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டுமாயின், எதிர்காலத்தை முன்னிறுத்திய கொள்கைகளும் முன்னரைக் காட்டிலும் மாறுபட்டவையாக இருக்கவேண்டும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஆணையானது ‘முழுமையான கட்டமைப்பு மாற்றத்தைக் கோருவதாக அமைந்திருப்பதுடன், இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் இனிமேல் பொருந்தாது என்பதையும் காண்பித்திருக்கிறது.
இந்நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு பிரதான காரணமாகும்.
13 ஆவது திருத்தத்தை ஏற்பதன் மூலம் தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பை அங்கீகரித்திருப்பதனால் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை அரசு வரக்கூடும்.
ஆகையினாலேயே 13 ஆம் திருத்தத்தை ஏற்க மறுப்பதுடன், ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு அப்பால் செல்வதன் ஊடாகவே தீர்வை அடைந்துகொள்ளமுடியும் என்ற விடயத்தைப் பெரும்பான்மை தலைமைகள் மக்களிடம் கூற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவின் இடைக்கால முன்மொழிவுகளை பூரணப்படுத்துவதாக வாக்குறுதியளித்திருக்கிறது.
இருப்பினும் இந்த முன்மொழிவுகள் பொதுவில் ‘ஏக்கிய இராச்சிய’ முன்மொழிவு என அடையாளப்படுத்தப்படுவதுடன், அது ஒற்றையாட்சி அரசைக் குறிக்கிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் ஒருமித்த இலங்கைக்குள் சிங்கள மற்றும் தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி கட்டமைப்பு தொடர்பான எமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தோம்.
இலங்கை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் உதவிக்கரம் தீட்டியதன் ஊடாக பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் இந்தியா நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது.
எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு உட்பட்ட முன்மொழிவுகளை நிராகரிப்பதற்கும், அதற்குப் பதிலாகத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்கும் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
பகிரவும்...