தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி மல்லாவி நகரில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் ஒன்று இன்று (02) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொது அமைப்பொன்றினால் குறித்த கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னரும் கைது செய்யப்பட்டுள்ளவர்களை புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்படும் குறித்த கையெழுத்துக்கள் மனுவாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த போராட்டத்தில், மத தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.