Main Menu

ஜெயலலிதா பிறந்தநாளில் 51 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது. பேரவை செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், பா.வளர்மதி, தளவாய் சுந்தரம், கோகுல இந்திரா உள்பட பேரவை மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தும் வகையில் மிக பிரமாண்டமாக கொண்டாடுவது பற்றி விவாதிக்கப்பட்டது. முதல்கட்டமாக ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 23-ந்தேதி மதுரை குன்றத்தூரில் 51 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திருமணங்களை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார். இந்த ஜோடிகளில் ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி-முரளி ஜோடியும் ஒன்று. கூட்டத்தில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மா ஆட்சி மலர அயராது உழைத்திட உறுதி ஏற்போம். எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர்கின்ற வரையில் களத்தில் மக்களுக்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். புதிய வெற்றி வரலாற்றை உணர்த்திட ஒற்றுமையோடு தொடர்ந்து உழைப்போம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பகிரவும்...