Main Menu

ஜனாதிபதியின் சீன விஜயத்துக்கான தயார்படுத்தல் குறித்து சபாநாயகருக்கு தெளிவுபடுத்திய சீனத் தூதுவர்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்குமிடையிலான சந்திப்பு புதன்கிழமை (01) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் ஸாவோ லெஜிவின் (Zhao Leji) வாழ்த்துக் கடிதத்தை சீனத் தூதுவர் புதிய சபாநாயகரிடம் கையளித்தார்.

சீனத் தூதுவர் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை சுட்டிக்காட்டியதுடன் எதிர்காலத்தில், குறிப்பாக பரிமாற்றத் நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் இரண்டு சட்டவாக்க நிறுவனங்களுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

பொலன்னறுவையில் உள்ள சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரகவியல் சிறப்பு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராக தனது முன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட சபாநாயகர் வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன,

இலங்கை மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் சீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நன்றி தெரிவித்ததோடு,இரு பாராளுமன்றங்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள் புதுப்பிப்பதற்கான ஆர்வத்தையும் சபாநாயகர் வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீனாவுக்கான முதலாவது விஜயத்துக்கான தயார்படுத்தல் தொடர்பில் குறிப்பிட்ட சீனத் தூதுவர் கீ சென்ஹொங், இந்த வரலாற்று நிகழ்வு இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் எனத் தெரிவித்தார்.

பகிரவும்...
0Shares