Main Menu

ஜனாதிபதிக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில் இன்று ஆரம்பிக்கப்பட்ட தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை இதன்போது ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். அத்துடன், இந்த முறைமையை மக்களுக்கு மிகவும் எளிதான மற்றும் ஈர்க்கக்கூடிய ஒன்றாக மாற்றுவதற்கு நாட்டின் வங்கி முறைமையிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் போது ஏற்படும் தடைகளை நீக்கி, சமூகத்தில் இதனை விரைவாகப் பிரபலப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ATM இயந்திரங்கள் மூலம் பணப் பரிமாற்றச் சேவைகளை வழங்கும் போது வங்கி முறைமைக்கு அதிக செலவு ஏற்படுவதாகவும், புதிய முறைமையின் ஊடாகப் பணப்பரிமாற்றங்கள் மாற்றமடையும் போது அந்தச் செலவைக் குறைக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தப் புதிய முறைமை பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான, நம்பகமான மற்றும் பாதுகாப்பானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வங்கித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கியின் (BOC) பதில் பொது முகாமையாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி வை.ஏ. ஜயதிலக்க, ஒன்லைன் முறைமையூடாகப் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள மக்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் ஆரம்பித்துள்ள இந்தப் புதிய வேலைத்திட்டத்திற்கு வங்கி முறைமையின் முழுமையான ஆதரவை வழங்கி, நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பயணத்திற்குத் தமது பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.