சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்கள், வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்படும் – ஆனந்த விஜேபால
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற முறையற்ற சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். இதற்கான முதல் கட்டமாகவே முறையற்ற வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பான சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தண்டனை சட்டக்கோவை, பொது சட்டம் , ஊழல் சட்டம் ஆகிய சட்டங்களில் காணப்படும் குறைப்பாடுகள் இந்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் முறையற்ற வகையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் இந்த புதிய சட்டத்தின் ஊடாக அரசுடமையாக்கப்படும்.
இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். மோசடி செய்யப்பட்ட அரச சொத்துக்கள் மற்றும் அரச நிதி அரசுடமையாக்கப்பட வேண்டும் என்று மக்கள் கடந்த காலங்களில் அழுத்தமாக வலியுறுத்தினார்கள்.மக்களின் அபிலாசைக்கு அமைவாகவே இந்த சட்டம் சர்வதேச கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை சட்டத்தின் பிரகாரம் அரசுடமையாக்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.இந்த சட்டத்தின் பிரகாரம் விசேட பொறிமுறைகள் வகுக்கப்படும் என்றார்.
பகிரவும்...