காவல்துறையினர் மரண தண்டனை தொடர்பில் முடிவெடுத்தால் நாளை அரசியல் கொலைகளும் படிப்படியாக இடம்பெறலாம் – ரஜீவ்காந்
யாருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற முடிவைக் காவல்துறையினர் எடுப்பதாகயிருந்தால் நாளை நாட்டில் எவரின் உயிருக்கும் உத்தரவாதமற்ற நிலைதான் உருவாகும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்
செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
‘கொழும்பில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பான சில விடயங்களை நாங்கள் பேசவேண்டியுள்ளது. இந்த நாட்டில் முன்னரும் காவல்துறையினர் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் அல்லது உண்மையாக குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட நபர்களைத் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு சென்று கொலை செய்யக்கூடிய சில செயற்பாடுகளைச் செய்துள்ளார்கள், கொலைசெய்துள்ளார்கள். பல தடவைகள் இப்படியான விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனை நாங்கள் கூறவில்லை. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அனுரகுமாரதிசநாயக்க ‘ஒருவர் ஆயுதம் இருக்கென்று கூறுவார் அவரை அழைத்து செல்வார்கள்,அவர் அந்த ஆயுதத்தை எடுத்துக் காவல்துறையினரைச் சுடுவதற்காக முயற்சி செய்வார் பின்னர் காவல்துறையினர் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காகச் சுட்டார்கள் என்று இந்த கதையை கூறுவார்கள்ஹ என தெரிவித்திருந்தார்.
இந்தக் கதை வந்து பல தடவைகள் தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்ட ஒன்று, இது பொய்யான கதை என்பது அனைவரும் அறிந்தது,பலரும் பல தடவைகளில் இதனை தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்ட இருவரும் எப்படி ஆயுதம் இருக்கின்ற இடத்திற்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்?அழைத்து சென்றார்களா என்பது தொடர்பில் பூரண விளக்கமில்லை.
2023ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கிலே குற்றவாளிகள் யாரையாவது எந்த இடத்திற்காகவது கொண்டு செல்லவேண்டும் என்றால் அதனை வீடியோ வடிவிலே காவல்துறையினர் பதிவு செய்யவேண்டும் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஆதாரம் இருக்கவேண்டும், எங்கே கூட்டிச்சென்றார்கள் என்ன நடந்தது.
எனினும் இந்தச் சந்தர்ப்பத்தில் இது எதுவுமே,செயற்படுத்தப்படவில்லை இவர்கள் குற்றவாளிகள் தானா? இல்லையா? எதற்காகக் கொலை செய்தார்கள்? யாரின் தூண்டுதலின் பேரில் கொலை செய்தார்கள்? என்ற விடயங்கள் என்பது எல்லாம் தெரியவராமலே இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
காவல்துறையினரைப் பொறுத்தவரையில் அவர்கள் யாருக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்ற முடிவை எடுப்பதாகயிருந்தால்,நாளை எங்களில் எவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகும் என்பதை நாங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு நீதிமன்றம் செல்லவும் நீதிமன்றம் செல்லவும் குற்றவாளியென்றால், அவருக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பதற்குமான அனைத்துச் சட்டதிட்டங்களும் இலங்கையில் இருக்கின்றன. இவ்வளவு அவசர அவசரமாகக் காவல்துறையினர் இவர்களைக் கொலை செய்வதற்கான காரணம் என்ன? என்ற கேள்வியை அரசை நோக்கி நாங்கள் எழுப்புகின்றோம்.
இன்று நேற்றல்ல தொடர்ச்சியாகப் பல சந்தர்ப்பங்களிலே இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன. எங்களைப் போன்ற செயற்பாட்டாளர்கள் பல தடவைகள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றோம், எந்த வித பாரிய வன்முறையிலும் ஈடுபடாத எங்களையே கைவிலங்குகளைப் போட்டுத்தான் அழைத்துச்செல்வார்கள்.
ஆனால் கொலைகளைச் செய்த இரண்டுபேரை எந்தக் கைவிலங்கும் இல்லாமலா அழைத்து சென்றார்கள் என்ற கேள்வி எங்களிற்குள்ளது. அதுமட்டுமல்லாது தொடர்ச்சியாக எத்தனை காலம்தான் ஆயுதத்தைக் காட்டக் கூட்டிச் சென்றார்கள் ஆயுதத்தை எடுத்துத் தங்களைச் சுட முயன்றார்கள், அவர்களை நாங்கள் கொலை செய்தோம் எனத் தெரிவிப்பார்கள்.
அவர்களிற்குச் சரியான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லையா அல்லது இந்த ஒரு பொய்கதைதான் அவர்களிடம் இருக்கின்றாதா என்ற கேள்வியெல்லாம் எங்களிடம் உள்ளது.
உண்மையிலேயே இந்த நாட்டில் உள்ள குடிமக்களின் பாதுகாப்புத் தொடர்பில் அதிக அக்கறை காண்பிக்கவேண்டிய காலமாக உள்ளது, சுமார் இரண்டு நாட்களில் ஆறுகொலைகள் இடம்பெற்றுள்ளன, ஜனவரியிலிருந்து இன்றுவரை 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன,.
இன்று நேற்றல்ல இலங்கையில் பலகாலமாகப் பாதாளஉலகம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்; என இந்தச்சூட்டு சம்பவம் இடம்பெறுவதை நாங்கள் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இவற்றைப் பயன்படுத்தி அரசியல் கொலைகளும் படிப்படியாக இடம்பெறலாம். கொலைகள் மலிந்துபோகின்றநாடாக இலங்கை மாறிக்கொண்டிருக்கின்றது.
இந்தக் கொலைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும், அதற்கான சரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், காவல்துறையினர் கொலைகாரர்களாக மாறுவதை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாங்கள் அனுமதிக்க முடியாது எனத் தொிவிததாா்
பகிரவும்...