Main Menu

கறுப்பு ஜூலையின் 42 ஆவது நினைவு தினம் இன்று

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமான

தினமாக இன்று ஜூலை 23 அமைகிறது.

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி முதல் சில வாரங்கள் இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.

கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என இந்த கலவரத்தை இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.

திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கருப்பு ஜுலை வன்முறைகள் அமைந்துள்ளதாக சிலர் கூறுவர்

கொழும்பு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள், சொத்துக்கள் என அனைத்தையும் அழிக்கும் செயற்படாக இந்த வன்முறை சம்பவம் பதிவாகியிருந்தது.

ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று தமிழர்களை தேடி தேடி தாக்குதல் நடத்தியது மாத்திரம் அன்றி, தமிழர்கள் இந்த வன்முறைகளில் கொலையும் செய்யப்பட்டார்கள்.

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கண்ணி வெடித்தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்த வன்முறைக்கான காரணம் உருவாக்கப்பட்டது.

இதன்படி, 1983 ஜூலை 24 ஆம் திகதியன்று இரவு, குறித்த படையினரின் உடலங்கள் கொழும்புக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் பொரளை பகுதியில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த இன வன்முறையின் ஆரம்பம் பொதுவாகக் கறுப்பு ஜூலை என்று பதிவாகியுள்ளது. இந்த வன்முறை 1983 ஜூலை 30 ஆம் திகதி வரை நீடித்தது.

இந்த நாட்களில் சுமார் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 18,000 வீடுகள் அழிக்கப்பட்டன. 5,000 வணிக நிலையங்கள் அழிக்கப்பட்டன. அத்துடன், 90,000 முதல் 150,000 தமிழர்கள் இடம்பெயர்ந்தனர்.

கறுப்பு ஜூலை வன்முறையின்போது சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டன.

இலட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கைத்தீவை விட்டுப் புலம்பெயர்ந்து ஏனைய நாடுகளுக்குச் செல்வதற்கு இந்த வன்முறையே வித்திட்டது.

அத்துடன், இந்த வன்முறையே தமிழர் போராட்டம் தீவிரமாவதற்கும் காரணமாக அமைந்தது. அதேநேரம், இலங்கையின் இனப்பிரச்சினையையும் சர்வதேச பிரச்சினையாக மாற்றியது.

 

பகிரவும்...
0Shares