Main Menu

கச்சத்தீவை அரசியலுக்காகப் பயன்படுத்தினால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப் படும் என எச்சரிக்கை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும், இலங்கை நாட்டின் இறைமையில் உள்ள கச்சத்தீவை அரசியலுக்காகப் பயன்படுத்தினால், அவர்களுக்கு எதிராகக் கடற்றொழில் சமூகம் விரைவில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவை மீட்பேன் என வடக்கு கடற்றொழில் சமூகத்திற்கு எதிரான ஒரு கருத்தைத் தொடர்ச்சியாக அரசியல் மேடைகளில் பேசி வருகின்றார்.

இவ்வாறு தொடர்ச்சியாக கூறி தமிழக கடற்றொழிலாளர்களை வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு எதிராகத் தூண்டுவீர்களாக இருந்தால் பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழக வெற்றி கழகத்தின் விஜய் அரசியல் இருப்புக்காக கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கு முன் வாருங்கள் என விஜய்க்கும், சீமானுக்கும் தாம் கோரிக்கை விடுத்ததாகவும், குறித்த கோரிக்கைக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை எனவும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.
பகிரவும்...
0Shares