எரிசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் – நாமல் ராஜபக்ஷ
எரிசக்தி அமைச்சர் மீது பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கோரும் வரை காத்திருக்காமல் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (31) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதை அரசாங்க அமைச்சர்களே தற்போது ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், இந்தத் தவறுகளால் ஏற்படும் நஷ்டத்தை பொதுமக்களே சுமக்க வேண்டியுள்ளது. இது மிகவும் அநீதியானது.
தாம் ஆட்சிக்கு வரும்போது ஊழல்வாதிகள் எவரும் தம்மிடம் இல்லை எனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தி, தற்போது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்களைப் பாதுகாக்கிறது.
தற்போதைய அரசாங்கம் அனுபவம் மற்றும் முதிர்ச்சி இல்லாத காரணத்தினால் பல தீர்மானங்களை எடுக்கத் தவறியுள்ளதாகவும், கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களை (துறைமுகம், விமான நிலையம், எரிசக்தித் திட்டங்கள்) எதிர்த்தமையே இன்று அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்குக் காரணம்.
நாட்டின் புலனாய்வுத்துறை பலவீனமடைந்துள்ளதாகவும், மதத் தலைவர்கள் மற்றும் கலாசார விழுமியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் இதன்போது கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ராஜபக்ஷக்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் (லம்போகினி, உகண்டா பணம் போன்றவை) வெறும் பொய்கள் என்பது தற்போது நிரூபணமாகி வருவதாகவும், கொள்கலன் கடத்தல் போன்ற விவகாரங்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
