ஈரானில் உலகப் பாரம்பரியத் தளம் சேதம் – UNESCO கவலை
யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட, தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோலஸ்தான் அரண்மனை (Golestan Palace), தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அரண்மனைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியையடுத்து, யுனெஸ்கோ அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
16 ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படும் இந்த அரண்மனை, ஈரானிய கலாச்சார அடையாளத்தின் முக்கியக் குறியீடாகும்.
மேலும், சர்வதேச சட்டத்தின்படி இவ்வாறான இடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ள தெஹ்ரானின் ஆர்க் சதுக்கத்திலும் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கஜார் வம்சத்தைச் சேர்ந்த ஈரானிய மன்னர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகப் பயன்படுத்தப்பட்ட கோலஸ்தான் அரண்மனை, பின்னர் பஹ்லவி வம்சத்தின் அதிகாரப்பூர்வ தலைமையகமாக மாறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரண்மனையில் உள்ள கண்கவர் கண்ணாடி வேலைப்பாடுகள் மற்றும் பழங்காலக் கண்ணாடி வடிவமைப்புகள், வெடிப்பின் அதிர்வலைகள் காரணமாக உடைந்து நொறுங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்ச் சூழலின் மத்தியில், விலைமதிக்க முடியாத இதுபோன்ற வரலாற்றுச் சின்னங்கள் ஆபத்தில் சிக்குவது சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
