Main Menu

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

முஸ்லிம்களின் நாளாந்த ரமலான் நோன்பு நிறைவைக் குறிக்கும் வகையில், நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

இஸ்லாமிய மதத் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து நிகழ்வு நடைபெற்றது.

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இதன்போது வரவேற்புரை நிகழ்த்தியதுடன் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் இங்கு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களுடன் ஜனாதிபதி சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் ஆகியோருடன் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசார், அரச அதிகாரிகள், உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.