Main Menu

இந்தியா கரிசனை காட்டவில்லை எனக் குறை கூறுவது பொருத்தமன்று – சி.வி. க்கு மனோ கணேசன் பதில்

மாகாண சபைகள் மற்றும் 13வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவது தொடர்பில், “இந்தியா ஏன் கரிசனை காட்டவில்லை? பாரதத்தின் இயலாமையா? தமிழரின் மீது அக்கறையின்மையா?” என வடக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளது பொருத்தமற்றது என எண்ணுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கட்சிகள் மாகாண சபைகள் தொடர்பில், “கூச்சப்படும் இளம் பிள்ளையைப் போல” வாய் திறந்து குரல் எழுப்பத் தயங்குகின்றன.

13வது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் குறித்து வெறுமனே இந்திய அரசை குறைசொல்வது பொறுத்தமற்றதாகும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் போன்ற நாடாளுமன்றக் கட்சிகள், மாகாண சபை தேவை என உரக்கச் சொன்னால், சமஷ்டி நிலைப்பாடு என்னானது என்ற கேள்வி எழுந்து விடுமோ எனப் பயப்படுகிறார்கள்.

எனவே, இது தொடர்பில், “தேர்தல் நடக்க வேண்டும். நடந்தால் நாங்களும் போட்டியிடுவோம்,” என அவர்கள் முணுமுணுக்கின்றனர். தமிழரசுக் கட்சிக்குள் இது தொடர்பில் இரட்டை நிலைப்பாடு நிலவுகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிப்படையாகவே 13வது திருத்தத்தை நிராகரித்தாலும், அவரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிடத் தயார் என்கிறார்.

13வது திருத்தம் இறுதித் தீர்வு என இந்தியா வலியுறுத்தியதாகத் தெரியவில்லை. இருப்பினும், “இருப்பதைப் பெற்று, தம்மைத் திடப்படுத்திக் கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும்” என்ற பொதுவான கருத்து தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

தனது பங்களிப்பினால் இலங்கை அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்ட மாகாண சபைச் சட்டத்தை இந்தியா சமீப காலம் வரை வலியுறுத்தியே வந்தது. ஆனால், அதற்குச் சமாந்திரமாகச் சம்பந்தப்பட்ட இலங்கை தமிழ்க் கட்சிகளே போதுமான அக்கறை காட்டாதபோது, இந்தியத் தரப்பு சலிப்படைந்து இருப்பதாக நான் புரிந்து கொண்டுள்ளேன்.

நண்பர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், வரதராஜ பெருமாள் ஆகியோர் மட்டுமே 13வது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைகள் குறித்துத் தெளிவாகவும் தைரியமாகவும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு அரசியல் வலிமை போதுமான அளவில் இல்லை. இந்நிலையில், இந்திய அரசை குறைசொல்வது பொருத்தமற்றதாகும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares