ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – 622 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 12.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. 6.0 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகவும், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளன.
காபூலில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை பல கட்டிடங்களை நிலநடுக்கம் உலுக்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட இந்தியாவிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலநடுக்கத்திற்குப் பின்னர் முறையே நான்கு தசம் ஐந்து முதல் ஐந்து தசம் இரண்டு வரை ரிக்டர் அளவில் மூன்று பின்அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள குனார் மாகாணத்தின் நோர்கல் மாவட்டத்தில் நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் மற்றும் இமயமலையின் அருகிலுள்ள பகுதிகளில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அதிகரித்து வருவது புவியியலாளர்கள் மத்தியில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்திய-யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் இயக்கம்தான் நிலநடுக்கத்திற்குக் காரணம் என்று புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.