பிரதமர், நிதி அமைச்சர் அடுத்த மாதம் யாழ் விஐயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவிர ஆகியோர் எதிர் வரும் முதலாம் இரண்டாம் திகதிகளில் யாழ்குடா நாட்டிற்கு விஐயம் மேற்கொண்டு பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டத்தில் எதிர் வரும் முதலாம் திகதி யாழ் செல்லும் நிதி அமைச்சர் யாழ் ஜெட்வின் விடுதியில் பனை அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடலையும் 2.30 மணிக்கு பண்டத்தரிப்பில் சிறு எண்ணெய் தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்விலும் அதனைத் தொடந்து காரைநகரில் கிராம அபிவிருத்தியில் பெண்கள் பங்கு தொடர்பான கலந்துரையாடலிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இரண்டாம் திகதி காலை 11 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் யாழ்மாநகர சபை மைதானத்தில் சமுர்த்தி பயனாளர்களுடனான பிரமாண்டமான கலந்துரையாடல் நடை பெறவுள்ளதுடன் அரியாலை நெடுங்குளத்தில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.
இவ் நிகழ்வுகளில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
பகிரவும்...