Main Menu

மெக்சிகோவில் மனித உடல் உறுப்புகளுடன் 45 பைகள் கண்டெடுப்பு- போலீஸ் விசாரணை

மேற்கு மெக்சிகோ, ஜலிஸ்கோ பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் மனித உடல் உறுப்புகளுடன் குறைந்தது 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 20ம் தேதி முதல் காணாமல் போன 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் என 7 பேரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் 7 பேரும் வெவ்வேறு நாட்களில் காணாமல் போனதும், ஆனால் இவர்கள் 5 பேரும் ஒரே கால் சென்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தது புலனாய்வு விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், பெரிய தொழில்துறை மையமான குவாடலஜாராவின் புறநகர்ப் பகுதியில் ஜபோபன் நகராட்சியில் 40 மீட்டர் (120 அடி) பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை அன்று மனித உடல் உறுப்புகள் கொண்ட 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ” 45 பைகளில் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் சொந்தமான மனித உடல் உறுப்புகள் இருந்தன. தடயவியல் நிபுணர்கள் மனித உறுப்புகளின் அடையாளங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். ஆனால், இவை கண்டுபிடிக்கப்பட்ட அதே பகுதியில்தான் சம்பந்தப்பட்ட கால் சென்டரும் இயங்கி வருகிறது. இதன் முதற்கட்ட விசாரணையில், கால் சென்டர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும், இதுதொடர்பான முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக மாற்ற கால் சென்டர் நிறுவன அதிகாரிகள் முயல்வதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார். இதுபோன்று கடந்த 2021ம் ஆண்டில் ஜாலிஸ்கோவில் உள்ள டோனாலா நகராட்சியில், 11 பேரின் மனித உடல் உறுப்புகளுடன் சுமார் 70 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் 2019ம் ஆண்டில், ஜபோபனின் மக்கள்தொகை இல்லாத பகுதியில் 119 பைகளில் 29 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பகிரவும்...