Main Menu

“மோடியிடமிருந்தே இந்தியாவை பாதுகாக்க வேண்டும்.!” – சீமான்

“இந்தியாவை பாதுகாக்க மோடி தேவையில்லை; மோடியிடம் இருந்துதான் இந்தியாவை பாதுகாக்க வேண்டும்” என்று, இராமநாதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் தெரிவிதுள்ளார்.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேசுவரி, பரமக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஹேமலதா ஆகியோரை ஆதரித்து, இராமநாதபுரம் அரண்மனை முன்பு நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது;

“இந்தத் தேர்தலில் மதச் சார்பற்ற கூட்டணியும், மதவாத கூட்டணியும் போட்டியிடுவதாக கூறுகின்றனர். அனைவரும் மனிதர்கள்தான்; சாதியும் மதமும் இடையே வந்ததுதான். சாதிகளைக் கூறி தமிழர்களை பிரித்து வைத்துள்ளனர். அதன் காரணமாகவே இராமநாதபுரம் தொகுதியில் இந்துவா… முஸ்லிமா..? என்ற பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர்.

சில தலைமுறைகளுக்கு முன்பு, நம்மில் இருந்து மதம் மாறியவர்கள்தான் முஸ்லிம்கள். அவர்கள் ஒன்றும் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. இங்குள்ள சாதிய வேற்றுமைதான் பதற்றமான நிலைக்கு காரணம். தமிழை ஆட்சி மொழியாக்க பாராளுமன்றத்தில் வலியுறுத்தியவர் காயிதே மில்லத் என்பதை ஒருவரும் மறந்து விடக்கூடாது. 

இஸ்லாமியர்களின் உரிமைக்காக நாம் தமிழர் கட்சி எப்போதும் உடன் நிற்கும். அ.தி.மு.க-வில் ஒரு முஸ்லிமுக்குகூட சீட் கொடுக்கவில்லை. தி.மு.க கூட்டணியில், முஸ்லிம் லீக்கிற்கு மட்டும் ஒரு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் தமிழர் கட்சி 5 இடங்களில் முஸ்லிம்களை நிறுத்தியுள்ளது. நாம் அனைவரும், மதம் மற்றும் சாதிகளைக் கடந்து தமிழர் என்ற உணர்வில் ஒன்றுபட வேண்டும்.

பாகிஸ்தான் இல்லாவிட்டால் பா.ஜ.க-வுக்கு அரசியலே இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி எந்த நல்ல திட்டத்தையும் செயற்படுத்தவில்லை. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மக்கள்தான் பாதிப்பிற்கு உள்ளாகினர். இந்தியாவை பாதுகாக்க மோடி தேவையில்லை; மோடியிடம் இருந்துதான் இந்தியாவை பாதுகாக்க வேண்டும். அய்யப்பன் கோயில் பிரச்னையை உருவாக்கிய பா.ஜ.க-தான் தற்போது அதை எதிர்த்து போராடுகிறது.

2020ம் ஆண்டுக்கு பின்னர் நிலத்தடி நீரே இல்லாத நிலை ஏற்படும். நிலத்தடி நீரை சேமித்து பாதுகாக்கும் திட்டங்களை பல நாடுகள் செயல்படுத்தி விட்டன. ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள், முதலாளிகளின் முகவர்களாகவும், தரகர்களாகவும் உள்ளனர். இப்படிப்பட்ட ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீர் மேலாண்மை, விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை அரசு பணியாக்கி, நாடு முழுவதும் வேளாண் பண்ணைகளை உருவாக்கி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவோம். எனவே, அனைவரும் எங்களை ஆதரிக்க வேண்டும். பணம் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் அரசியல் செய்ய முடியும், தேர்தலில் நிற்க முடியும் என்ற நிலையை மாற்ற, நாம் தமிழர் கட்சிக்கு, கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

பகிரவும்...