மைத்திரி களமிறங்காவிட்டால் கோத்தாவை சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் – சாந்த பண்டார
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்காது போனால் எமது ஆதரவை கோத்தபாய ராஜபக்ஷவிற்கே வழங்க தீர்மானம் எடுத்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் எந்த நோக்கமும் எமக்கில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு கூடி ஜனாதிபதித் தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் கட்சியின் உறுப்பினர்கள், ஆளுநர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என அனைவரும் பொது இணக்கப்பாட்டை எட்டும் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும். ஆகவே அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்னுமொரு தடவை களமிறக்க முடியும். அதற்கான கோரிக்கையை நாம் முன்வைத்தோம். ஆனால் அதற்கான பதில் இன்னமும் ஜனாதிபதியிடத்தில் இருந்து வரவில்லை. ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்முறை களமிறங்காது போனால் நாம் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்க எந்த தீர்மானமும் எடுக்கவில்லை.
எமது மாற்று நடவடிக்கையாக கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்க முடியும். அதில் எந்த சிக்கலும் இல்லை. அவரது தேர்தல் வெற்றிக்காக எம்மால் செயற்பட முடியும். அதுவே எமது தீர்மானமாக இருக்குமே தவிர மீண்டும் ஒருமுறை ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் எந்த நிலைப்பாடும் எம்மிடத்தில் இல்லை.
இன்று நாட்டு மக்கள் அனைவரும் மாற்று ஆட்சியொன்றை கேட்டு நிற்கின்றனர். ஆகவே அவர்களுக்கு ஏற்ற அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை நாமும் முன்னெடுத்து வருகின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இன்று வேறு கட்சிகளாக தெரிந்தாலும் இரு கட்சிகளின் உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்ட நபர்கள். ஆகவே மீண்டும் எம்மால் ஒன்றுசேர முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.