பேரரசரை சந்திக்க முன்னர் புலம்பெயர் சமூகத்தினருடன் பேச தயாராகும் ஜனாதிபதி
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (28) பிற்பகல் அங்கு வசிக்கும் இலங்கை சமூகத்தினரை டோக்கியோவில் சந்திக்க உள்ளார்.
ஜப்பானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி நேற்று (27) ஜப்பான் சென்றடைந்தார்.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமடா, ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளித்தனர்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து ஜப்பானின் ஒசாகாவில் ஏற்பாடு செய்த “எக்ஸ்போ 2025” இலங்கை தின நிகழ்வில் நேற்று (27)ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, இன்று (28) காலை Shin- Osaka தொடருந்து நிலையத்திலிருந்து டோக்கியோவுக்குப் பயணமான ஜனாதிபதி, இன்று பிற்பகல் டோக்கியோவில், ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரைச் சந்திக்க உள்ளார்.
தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜப்பான் பேரரசர் நருஹிட்டோவை சந்திக்க உள்ளதோடு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
இலங்கை மற்றும் ஜப்பான் வர்த்தக சபைகள் இணைந்து டோக்கியோவில் ஏற்பாடு செய்துள்ள இலங்கை முதலீட்டு மன்றத்திலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
பகிரவும்...