Main Menu

நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை சமர்ப்பித்து நாளை பிரதமர் விசேட உரை

2021ஆம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் நிகழ்த்தவுள்ளார்.

இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது.

இதன்போது, அரச செலவீனங்களுக்கான நிதியை இலங்கைக்குள் அல்லது வெளிநாடுகளில் கடனாகப் பெற்றுக்கொள்வதற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தினை இரண்டாம் வாசிப்பிற்காக மஹிந்த ராஜபக்ச சமர்ப்பிக்கவுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி 2021ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் ஒக்டோபர் 20ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் சமர்பித்திருந்தார்.

இந்நிலையில், 2021 வரவு செலவுத் திட்ட உரையை நாளை பிரதமர் நிகழ்த்தவுள்ளார். இதன்பின்னர் இலங்கையின் 75ஆவது வரவு செலவுத் திட்டம் வெளியிடப்படவுள்ளது.

அடுத்த ஆண்டிற்கான அரச செலவீனங்களுக்கு இரண்டாயிரத்து 678 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்தல் மற்றும் இரண்டாயிரத்து 900 பில்லியன் ரூபாய் கடன் பெறல் ஆகிய இரு விடயங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நாளை மறுதினம் 18ஆம் திகதி ஆரம்பித்து 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அத்துடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21ஆம் திகதி பிற்பகல் ஐந்து மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த விவாத காலப்பகுதியில் நாடாளுமன்ற அமர்வுகள் காலை 9.30 மணி தொடக்கம் பிற்பகல் 5.30 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...