உக்ரைனிற்கான இராணுவஉதவிகளை இடைநிறுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ் நியுசிற்கு இதனை தெரிவித்துள்ள வெள்ளைமாளிகை அதிகாரியொருவர் நாங்கள் இராணுவ உதவியை இடைநிறுத்துகின்றோம் எங்களின் உதவி தீர்விற்கு உதவுகின்றதா என்ற மீளாய்வில் ஈடுபட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி துணை ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதி ஆகியோர் தொலைக்காட்சி கமராக்களிற்கு முன்னால் வெள்ளை மாளிகையில் மோதிக்கொண்டதின் சமீபத்தைய விளைவு இது என சிபிஎஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி சமாதானம் குறித்து தான் கவனம் செலுத்தவேண்டும் என்பது குறித்து உறுதியாகவுள்ளார், என சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் எங்கள் சகாக்களும் அந்த இலக்கு குறித்து தங்களை அர்ப்பணிக்கவேண்டும்,என குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வருடத்திற்கு முன்னர் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனிற்கு எதிரான போரை ஆரம்பித்தவேளை அதனை உக்ரைன் எதிர்கொண்டு ரஸ்யாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஆயுதங்களே பெருமளவிற்கு உதவின.
எனினும் டிரம்பின் மீள்வருகை அமெரிக்காவின் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளதுடன் அவர் யுத்தத்தை உக்ரைனே ஆரம்பித்தது என குற்றம்சாட்டியுள்ளார்.
