வெற்றி பெறும் தறுவாயில் சுதந்திர கட்சியுடனான பேச்சு: பஷில்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி பெறும் தறுவாயிலேயே உள்ளது. தற்போது சின்னம் குறித்து முரண்பாடுகள் எழுந்திருந்தாலும், இரு தரப்பும் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்று பொதுஜன பெரமுனவின் போஷகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், சுயாதீன குழுக்களின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பே நடைபெற்றது. சாதாரண முறையில் தேர்தலை நடத்துவதற்கும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உரிய நடவடிக்களை அனைத்து கட்சிகளும் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்றைய (நேற்றைய) கலந்துரையாடலில் பிரதானமாகக் காணப்பட்டது.
பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இதன் போது எழுந்தன. எவ்வாறாயினும் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சாதாரண முறையிலும் ஜனநாயக முறையிலும் இடம்பெற வேண்டும் என்பதே பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனமாகவும் காணப்படுகிறது. தேசிய தேர்தலினூடாகவே நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகிறது. ஐ.தே.க. சார்பில் எவர் களமிறங்கினாலும் எமக்கு சவால் அல்ல. ரணில், சஜித் மற்றும் கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவர் களமிறங்குவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் அவற்றை நாம் பொருட்படுத்தப் போவதில்லை.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வதாக இருந்தால் தான் போட்டியிடுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. தேர்தல் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்று குறிப்பிடுவது வெறும் தேர்தல் பிரசாரமேயாகும். தற்போதைய ஜனாதிபதியும் இதனையே குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்தார். ஆகவே இவ்விடயத்தில் மக்கள் உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி பெறும் தறுவாயிலேயே உள்ளது. தற்போது சின்னம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. இரு தரப்பும் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்க்கமான முடிவினை எடுப்போம். எவ்வகையிலும் கூட்டணி தோல்வியடையாது. நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.