வடக்கு செல்ல தயாராகும் தேசிய மக்கள் சக்தி
மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் புத்திஜீவிகள் அமைப்பினர் வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் கொள்கைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்களை வடக்கு மக்களுடன் கலந்துரையாடல்களை செய்வதற்கும், வடக்கு மக்களின் கோரிக்கைகள் தொடர்பான மேலதிக ஆராய்வுகளைச் செய்வதற்காகவுமே மேற்படி புத்திஜீவிகள் அமைப்பினர் அங்கு செல்லவுள்ளனர்.
வடக்கிற்கு செல்லும் புத்திஜீவிகள் குழுவில் சட்டத்தரணிகள் உபுல் குமாரப்பெரும, அஜித் கல்லோன, அசோக பீரிஸ் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணின் மத்திய குழு உறுப்பினரும் வடமாகாண விவகாரங்களை கையாண்டு வருபவருமான இராமலிங்கம் சந்திரசேகரன், மக்கள் விடுதலை முன்னணிக்கும் வடக்கு தமிழ் மக்களுக்கும் இடையிலான புரிதல்கள் சமகாலத்தில் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டதோடு தமிழ் மக்கள் பிரதான கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு எந்தவிதமான நியாயமும் இல்லை என்றும் கூறினார்.
அத்துடன் எதிர்வரும் தேர்தல்களில் வடக்கு மக்கள் ,மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை தாம் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பகிரவும்...