பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது தென்னாபிரிக்கா!

பாகிஸ்தான் அணிக்கெதிரான ஐந்தாவதும் இறுதியுமான தீர்க்கமான ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் தென்னாபிரிக்கா அணி, 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
கேப்டவுணில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பகர் சமான் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் ஆன்டில் பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 241 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 40 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக குயிண்டன் டி கொக் 83 ஓட்டங்களையும், டு பிளெஸிஸ் மற்றும் ராஸி வெண்டர் டஸன் ஆகியோர் தலா 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் உஸ்மான் கான், சயீன் அப்ரிடி மற்றும் மொஹமட் அமீர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக குயிண்டன் டி கொக் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் நாயகனாக இமாம் உல் ஹக் தெரிவு செய்யப்பட்டார்.