பயணத்தின் போது அசந்து தூங்கியதால், விமானத்தினுள் சிக்கிக் கொண்ட பெண்!

ஏர் கனடா விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் அசந்து தூங்கியதால், விமானத்தினுள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஃப்பானி ஆடம்ஸ் என்ற அந்த பெண்மணி, அண்மையில் கனடாவின் க்யூபெக் நகரிலிருந்து டொரண்டோ நகருக்கு பயணம் செய்துள்ளார். அப்போது ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அவர், விமானத்திலிருந்து பயணிகள் இறங்கி சென்றது கூட தெரியாமல் தூங்கியுள்ளார்.
இதையடுத்து நிறுத்தப்பட்டிருந்த விமானத்துக்குள் கண்விழித்த அந்த பெண், தாம் எங்கிருக்கிறோம் என்பது கூட தெரியாமல் தவித்துள்ளார். பின்னர் சுதாரித்து கொண்ட அவர், தனது தோழிக்கு தகவல் தெரிவிக்க முயன்றபோது செல்போன் அணையும் கட்டத்தில் இருந்துள்ளது.
நின்று கொண்டிருக்கும் விமானத்தில் சார்ஜும் போட முடியாது என்பதால், செய்வதறியாது திகைத்த அந்த பெண் விமானத்தின் கதவினை திறந்துள்ளார். ஆனால் கீழிறங்க படிகள் இல்லாததால் ஏமாற்றமடைந்த அவர், அப்படியே கதவருகிலேயே அமர்ந்து விட்டார்.
அப்போது அவ்வழியாக சென்ற வாகனத்திற்கு தனது செல்போனில் மிச்சமிருந்த சார்ஜைப் பயன்படுத்தி, டார்ச் அடித்து சைகை காண்பித்துள்ளார். இதைப்பார்த்த வாகன ஓட்டுநர், விமான நிலைய ஊழியர்களுக்கு தகவலளித்து அந்தப் பெண்ணை மீட்டுள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த பெண், விமானத்தில் தூங்கிய போது தான் ஏதோ கெட்ட கனவில் இருந்ததாக நினைப்பதாகக் கூறியுள்ளார். இந்தப் பதிவு வைரலான நிலையில், அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைக்கு ஏர்கனடா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
பகிரவும்...