நாடளாவிய ரீதியில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம் – வங்கிப் பணிகள் பாதிப்பு!
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து நாடு முழுவதும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதன் மூலம் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.
இதனையடுத்து, மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் எனப் பத்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டுள்ளதால் பணம் செலுத்தல், எடுத்தல், காசோலையைப் பணமாக்குதல், கடன் ஒப்புதல் அளித்தல் ஆகிய வங்கிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பகிரவும்...