தேர்தலை இலக்காகக் கொண்டு என்மீது பொய் குற்றச் சாட்டுக்களை முன் வைக்கின்றனர் – ரிஷாட்
தேர்தல்களை இலக்காகக் கொண்டு இனவாதக் கூட்டம் தன் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்துவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அமைச்சுப் பதவியை மீண்டும் பொறுப்பேற்றுள்ள அவர், நேற்று (செவ்வாய்க்கிழமை) கொள்ளுப்பிட்டியில் உள்ள அலுவலகத்தில் கடமைகளை பெறுப்பேற்றதன் பின்னர் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், “ஈஸ்டர் தாக்குதலுடன் என்னை தொடர்புபடுத்தி சில இனவாதிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். ஊடகங்களில் பிரமாண்டமான பிரசாரங்களை மேற்கொண்டனர். நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தனர்.
இதனால் என் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு பொலிஸ் திணைக்களம் உயர்மட்ட பொலிஸ் குழுவொன்றை அமைத்தது.
எனினும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை என்றும் பொய்யானவை என்றும் விசாரணைகளிலிருந்து வெளிப்படுத்தப்பட்டன. தெரிவுக்குழுவிலும் சாட்சியாளார்கள் இதனை மீண்டும் தெளிவுபடுத்தினர்.
இஸ்லாம் மார்க்கம் வன்முறைகளையோ பயங்கரவாதத்தையோ ஒருபோதும் ஆதரிக்கவில்லை. எமது சமூகத்தைப் பற்றிய பிழையான பார்வை ஒன்றை சிலர் விசமத்தனமாக பரப்பி வருகின்றனர்.
என்னை பொறுத்தவரையில் கடந்த காலத்தைப் போன்று இன்னும் எஞ்சி இருக்கின்ற காலங்களிலும் அமைச்சின் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவேன்” என மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரண, அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பகிரவும்...