Main Menu

ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒரு சூழ்நிலை கைதியாக இருக்கிறார் – நாகலிங்கம் இரட்ணலிங்கம்

ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒரு சூழ்நிலை கைதியாக இருக்கிறார் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் (குருபரன்) தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் காரைதீவு பொது நூலக கேட்போர் மண்டபத்தில் புதன்கிழமை (23) மாலை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் இந்த அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் (குருபரன்) பிரதான பேச்சாளராக கலந்துகொண்டார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான சிவசுந்தரம் புண்ணியநாதனும் (கரன்) கூட்டத்துக்கு பங்கேற்றார்.

கூட்ட வேளையில், காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர் ரவிச்சந்திரன் (சங்கரி) உட்பட வேட்பாளர்கள் அனைவரும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர், ஊடகச் சந்திப்பொன்று நடைபெற்றது.

 

அந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம், ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒர் சூழ்நிலை கைதியாக இருக்கின்றார் என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இதுவரை ஜனாதிபதியை விமர்சிப்பதற்கான எந்த சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்கவில்லை.

இந்த நாட்டில் யார் ஜனாதிபதியானாலும்  இவ்வாறானதொரு சூழ்நிலைக் கைதியாகவே இருப்பார். அத்துடன் ஜனாதிபதி செய்வார் என எதிர்பார்த்த எந்தவொரு விடயங்களையும் அவர் செய்யவில்லை. எனவே, அவர் பொய்தான் பேசுகிறார் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியும்.

எங்களது உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கும் ஜனாதிபதி மாதிரி பொய் வாக்குறுதிகளை எமது மக்களுக்கு பிரச்சார வேளையில் வழங்க வேண்டாம் என தெளிவாக அறிவுறுத்தியுள்ளோம்.

மக்கள் இவ்வாறான பொய் வாக்குறுதிகளால்தான் சலித்துப்போயுள்ளனர்.

எமது வட கிழக்கில் தமிழ் தேசிய அரசியல் வீழ்ச்சிக்குக் காரணம் கொள்கைகள் அல்ல. தவறான வாக்குறுதிகளும் வாக்குறுதிகளை மீறியமையும் ஆகும் என்றார்.

 

 

 

பகிரவும்...
0Shares