கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்திய குற்றச்சாட்டு – பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடியாணை
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவிக்கு பிடியாணை பிறப்பித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, அவர்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது சம்பந்தப்பட்ட சாட்சிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஆகியோரிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.
மேலும் வழக்கில் தொடர்புடைய உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
மேலும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அழைத்துச் செல்ல படுவதாகவும் கூறி அவரது வழக்கறிஞர் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பரிமளா, பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். அத்தோடு இவ்வழக்கு விசாரணையை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
பகிரவும்...