உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பண்டாரவளை மரியாள் தேவாலயத்தில் ஆராதனைகள்

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பண்டாரவளை மரியாள் தேவாலயத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (21) ஆராதனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தலை முன்னிட்டு பண்டாரவளை புனித அந்தோனியார் தேவாலய (Bandarawela St. Anthony’s Church) உதவி பங்குத்தந்தை Rev. Fr.Jelthsin Chrles தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதன்போது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த உறவுகளுக்காக விசேட திருப்பலி பூஜைகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன.
அதேவேளை, நாட்டில் நிரந்தர சமாதானம் வேண்டியும் தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைத்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2019ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் பண்டாரவளையைச் சேர்ந்த மரியதாஸ் என்பவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.